

கரோனா தடுப்பூசி குறித்து கேலி பேசியதையும் தாண்டி, கடைசி மனிதனுக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல் தடுப்பூசி போட்டது பாஜவின் சாதனை என்று ஈரோட்டில் அண்ணாமலை பேசினார்.
ஈரோடு வில்லரசம்பட்டியில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
கரோனா பரவலின்போது நாட்டில் 30 கோடி பேர் இறப்பார்கள் என்று ராகுல் காந்தியும், உள்நாட்டில் தயாராகும் தடுப்பூசியில் தரம் இருக்குமா என ஸ்டாலினும், ஊசி போட்டால் ஹார்ட் அட்டாக் வரும் என திருமாவளவனும் கேலி பேசினார்கள். ஆனால், நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 172 கோடி டோஸ் தடுப்பூசி மருந்தினை, கடைசி மனிதனுக்கும், எவ்வித பிரச்சினையும் இல்லாமல் கொண்டு சேர்த்தது பாஜகவின் சாதனை. பிரதமர் மோடியின் சாதனை.
தரமற்ற பொருட்களை பொங்கல் தொகுப்பாக வழங்கி ஊழல் செய்துள்ளனர். எல்லாப் பொருட்களிலும் ஊழல் நடந்துள்ளது. இத்தனையும் செய்துவிட்டு, உள்ளாட்சியில் நல்லாட்சி தருவதாக திமுகவினர் பொய் சொல்லி வருகின்றனர். பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சாதாரணமானவர்கள். உங்களுக்கு சேவை செய்ய வந்திருக்கும் அவர்களை ஆதரியுங்கள் என்றார். மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி, மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.