'நகரை குப்பைக் காடாக்காதீர்' - தேர்தல் விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்ட யாருக்கும் அனுமதியில்லை: சென்னை உயர் நீதிமன்றம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்காக விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்ட யாருக்கும் அனுமதியளிக்கக் கூடாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், விதிகளை மீறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றி, அதற்கான செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் வசூலிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி 117-வது வார்டில் தேர்தலில் பிரச்சாரத்துக்காக ஒட்டப்பட்ட தனது போஸ்டர் மீது திமுக வேட்பாளர் போஸ்டர் ஒட்டியுள்ளதாக கூறி, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி அதிமுக வேட்பாளர் ஆறுமுகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில், அனுமதியின்றி போஸ்டர் ஒட்ட தடை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனுமதியின்றி போஸ்டர் ஒட்ட யாரையும் அனுமதிக்க கூடாது என சென்னை மாநகராட்சிக்கும், காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டனர். அதையும் மீறி போஸ்டர் ஒட்டியவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், ஏற்கெனவே ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றி, அதற்கான செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் வசூலிக்கவும் உத்தரவிட்டனர்.

கோப்புப் படம்
கோப்புப் படம்

தேர்தலின் பெயரால் நகரை குப்பைக்காடாக்க கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த உத்தரவை மீறுவோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டனர். மேலும் வேட்பாளர்கள் அரசு கட்டிட சுவர்கள், தனியார் சுவர்களில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டக் கூடாது என விளம்பரம் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து பிப்ரவரி 21-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநகராட்சி, மாநில தேர்தல் ஆணையம், காவல் ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in