Last Updated : 16 Feb, 2022 07:39 AM

 

Published : 16 Feb 2022 07:39 AM
Last Updated : 16 Feb 2022 07:39 AM

தமிழகத்தின் தனுஷ்கோடி கடற்கரை வழியாக இலங்கை நோக்கி பயணித்த ‘கிரிம்சன் ரோஸ்’ பட்டாம்பூச்சிகள்

கோப்புப் படம்

கோவை

தமிழகத்தில் உள்ள சிலவகை பட்டாம்பூச்சிகள் காலநிலை மாற்றம், உணவு தேவைக்காக வலசை செல்லும் இயல்புடையவை. ‘ஃபுளூ டைகர்’, ‘டார்க் ஃபுளூ டைகர்’, ‘காமன் குரோ’, ‘டபுள்-பிராண்டட் குரோ’ வகை பட்டாம்பூச்சிகள் வடகிழக்குப் பருவமழை காலத்துக்கு முன்பாக மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கும், தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன்பாக கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கும் இடம்பெயர்கின்றன.

இந்நிலையில், இயற்கை ஆர்வலர்களான பால்மதி வினோத், வினோத் சதாசிவம், எஸ்.சந்திரசேகரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆயிரக்கணக்கான ‘கிரிம்சன் ரோஸ்’ வகை பட்டாம்பூச்சிகள் ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கை நோக்கி கடல் வழியாக பயணிப்பதை நேற்றுமுன்தினம் பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பால்மதி வினோத் கூறும்போது, "கடற்கரையிலிருந்து கடலை நோக்கி குறிப்பிட்ட வலசைப்பாதையில் ஒன்றன்பின் ஒன்றாக அந்த பட்டாம்பூச்சிகள் சென்றன. கடலை கடந்து செல்லும்போது அவை வழியில் எங்கும் இறங்கி, உணவருந்தி செல்ல முடியாது. எனவே, செல்வதற்கு முன்பாக அந்த பட்டாம்பூச்சிகள் தனுஷ்கோடி கடற்கரையோரம் இருந்த பூச்செடிகளில் உணவு உட்கொண்டுவிட்டு சென்றது வியப்பளிப்பதாக இருந்தது. ஒவ்வொரு பட்டாம்பூச்சியும் சுமார் 30 விநாடிகள் அந்த பூச்செடிகளில் உணவருந்திவிட்டு பின்னர் பறந்து சென்றன.

எனவே, கடற்கரையோரங்களில் இயற்கையாக இருக்கும் பூச்செடிகள், இதர செடிகளை பாதுகாப்பது அவசியம். பட்டாம்பூச்சிகள் அந்த வழியாக வலசை செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த செடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.

இதுகுறித்து இயற்கை, பட்டாம்பூச்சி அமைப்பினர் (டிஎன்பிஎஸ்) கூறும்போது, “கிரிம்சன் ரோஸ் வகை பட்டாம்பூச்சி கடற்கரையோரமும், உள்நாட்டுக்குள்ளும் இடம்பெயரக் கூடியவை. அவ்வப்போது கடல் தாண்டியும் அவை பயணிக்கின்றன. இந்த வகை பட்டாம்பூச்சிகள் கடலை கடந்து இலங்கை செல்லும் நிகழ்வு ராமேஸ்வரத்தில் இருந்து முன்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது அதிக எண்ணிக்கையில் இந்த வகை பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்வதும், இடம்பெயரும் முன்பு மலர்களில் அவை தேன் அருந்தி செல்வதும் ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது," என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x