

சென்னை: சென்னை மாநகராட்சித் தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை முழுமையாக கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்துள்ள உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி 182-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சதீஷ்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை மாநிலத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் முறையாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்.
இதுதொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சிசிடிவி கேமராக்கள் பொருத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘கடந்த 2006-ம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் பல விரும்பத்தகாத மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. அதை கருத்தில்கொண்டு தற்போது சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்’’ என கோரினார்.
மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘‘ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் முறையாக வகுக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்து, பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை என கண்டறிந்து எந்த வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்பதை மாநிலத் தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த வழக்கு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் உள்ளது’’ எனக் கூறி மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.