

ஆவடி: அம்பத்தூர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை, அம்பத்தூர், அயப்பாக்கம் சாலையில் உள்ள டி.ஜி.அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரத் சந்திரன் (74). இவரது மனைவிநிர்மலா (64). சரத் சந்திரனின் இளையமகன் சந்தோஷ்ராஜ் (30) திருமணமாகிப் பெற்றோர் வீட்டுக்கு அருகே வசித்து வருகிறார்.
இந்நிலையில், சரத் சந்திரன் கடந்த5 நாட்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை பகுதியில் உள்ள தன் மகள் வீட்டு சென்றுள்ளார். இதனால் வீட்டில் நிர்மலா தனியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை பெற்றோர் வீட்டுக்கு சந்தோஷ்ராஜ் வந்தார். அப்போது, வீட்டின் உள்ளேநிர்மலா மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, தகவலறிந்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் விரைந்து, நிர்மலாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காகச் சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், நகைக்காக நிர்மலா கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி, கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.