வேலை வாங்கி தருவதாக ரூ.2.30 கோடி மோசடி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு

வேலை வாங்கி தருவதாக ரூ.2.30 கோடி மோசடி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு
Updated on
1 min read

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.30 கோடி மோசடி செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை நீலாங்கரையை சேர்ந்த கோபி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர், உதவிப் பொறியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. பலர் விண்ணப்பித்தோம். நேர்முகத் தேர்விலும் கலந்துகொண்டோம். அப்போது போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் உறவினர் கார்த்திக் என்பவர் எங்களை தொடர்புகொண்டு, ‘‘நடத்துநர், ஓட்டுநர் பணிக்கு ரூ.3 லட்சம், உதவிப் பொறியாளர் பணிக்கு ரூ.6 லட்சம் கொடுத்தால், வேலை உறுதி’’ என்றார். மொத்தம் 107 பேர் சுமார் ரூ.2.30 கோடி கொடுத்தோம். இத்தொகையை அமைச்சர் செந்தில் பாலாஜியே நேரில் எங்களிடம் வாங்கினார். அவரது சகோதரர் அசோகன், பி.ஏ. பாஸ்கர் உடனிருந்தனர்.

ஆனால், பணி நியமன உத்தரவு எங்களுக்கு வரவில்லை. கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது, செந்தில் பாலாஜி தரப்பினர் மிரட்டல் விடுக்கின்றனர். இதுதொடர்பாக போலீஸ் ஆணையரிடம் கடந்த மார்ச் 8-ம் தேதி புகார் கொடுத்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.30 கோடி மோசடி செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மாலா, விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜியின் பெயரைக் கூறி திருச்சியை சேர்ந்த ஒருவர் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக ஏற்கெனவே ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளராக செந்தில் பாலாஜி தற்போது போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in