

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டை பேரூராட்சியில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.
நாட்டரசன்கோட்டை பேரூ ராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. பேரூராட்சித்தலைவர் பதவி பொதுப்பிரிவினர் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே 12-வது வார்டில் அப் பகுதி மக்களால் நிறுத்தப்பட்ட பொதுவேட்பாளர் கலையரசி போட்டியின்றி தேர்வானார்.
இதனால் 11 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடக்கிறது. மேலும் தமிழக அளவில் அதிமுக, பாஜக தனித்தனியே போட்டியிடுகிறது. ஆனால் நாட்டரசன்கோட்டையில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. 1, 4-வது வார்டுகளில் பாஜக போட்டியிடுகிறது. அந்த வார்டுகளில் அதிமுக போட்டியிடவில்லை.
மீதமுள்ள 9 வார்டுகளில் அதிமுகவை எதிர்த்து பாஜக வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
2 வார்டுகளில் மட்டுமே பாஜக போட்டியிட்டாலும் பேரூராட்சித் தலைவர் பதவியைக் குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. மேலும் திமுக கூட்டணியில் திமுக 9 இடங்கள், காங்கிரஸ் 2 இடங்களில் போட்டியிடுகின்றன.
பேரூராட்சித் தலைவர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டதால், திமுக கூட்டணியில் 11 வார்டுகளில் 7 பெண்கள் போட்டியிடுகின்றனர்.
மேலும் திமுகவில் பேரூராட்சித் தலைவர் பதவியைக் குறி வைத்து அக்கட்சி நகரச் செயலாளர் ஜெயராமன் தனது மனைவி சுமதியை 8-வது வார்டிலும், முன்னாள் நகரச் செயலாளர் கணேசன் தனது மனைவி சரோஜாவை 6-வது வார்டிலும் நிறுத்தியுள்ளனர்.
இந்த 2 வார்டுகளும் பொதுப் பிரிவினருக்கானவை.
அதேபோல் திமுக முன்னாள் பேரூராட்சித் தலைவர் முருகானந் தம் தனது மனைவி கார்த்திகாவை 2-வது வார்டில் நிறுத்தியுள்ளார்.
இந்த பேரூராட்சியில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.