டாஸ்மாக் கடைகள் வைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மாவட்ட ஆட்சியர்கள் பரிசீலிக்க விதிகளில் திருத்தம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்
சென்னை: டாஸ்மாக் கடைகள் வைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், மாவட்ட ஆட்சியர்கள் பரிசீலிக்கும் வகையில் மதுபான சில்லரை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாக தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
டாஸ்மாக் மதுபானக்கடைகள் எங்கள் கிராமத்தில் வேண்டாம் என கிராம பஞ்சாயத்துகளில் தீர்மானம் நிறைவேற்றினால் அதை செயல்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றம் இருவேறு தீர்ப்புகளை பிறப்பித்தது. அதையடுத்து இதுதொடர்பான வழக்குகள் 3 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், டாஸ்மாக் மதுபானக்கடைகள் தங்களது பகுதிக்கு வேண்டாம் என கிராம பஞ்சாயத்துகளில் தீர்மானம் நிறைவேற்றினால் அதைசெயல்பாட்டுக்கு கொண்டுவர விதிகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து, அரசு தனதுநிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமைநீதிபதி முனீ்ஷ்வர்நாத் பண்டாரிமற்றும் நீதிபதிகள் சி.கார்த்திகேயன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில் மதுபான சில்லரை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக்கூறி, அறிக்கை தாக்கல் செய்தார். மேலும், ஆட்சேபங்களை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்காமல் எந்த கடைகளையும் திறக்கஅனுமதிக்கக்கூடாது என அந்தவிதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான மாவட்ட ஆட்சியர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்குகளை மீண்டும் சம்பந்தப்பட்ட அமர்வுகளுக்கு மாற்றி, முழு அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட கேள்வியை முடித்து வைத்தனர்.
மேலும், குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தாலும் பஞ்சாப், ராஜஸ்தான் மூலமாக மதுபானங்கள் அங்கு கொண்டு செல்லப்படுவதாக கூறிய நீதிபதிகள், அதேபோல ஒரு கிராமத்தில்கடை தொடங்க ஆட்சேபம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினால் மது அருந்துவோர் அருகில் உள்ள மற்றொரு கிராமத்துக்கு செல்வர் என்றும், அப்படிப்பட்ட சூழலில் கிராமசபை தீர்மானத்துக்கு எவ்விதப் பலனும் இல்லாமல் போய்விடும் எனவும் கருத்து தெரிவி்த்தனர்.
