

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார்குடி பந்தலடியில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது:
தேர்தலில் பாஜகவுக்கு போட்டியிட ஆளில்லாததால், சில இடங்களில் மட்டுமே போட்டியிடுகின்றனர். அவர்களுக்கும் அதிமுகவினரே உதவி செய்கின்றனர். எனவே, அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு என்பது, பாஜகவுக்கு அளிக்கும் வாக்குதான். அதிமுகவுக்கு வாக்களிப்பது மதக்கலவரத்தை தூண்ட ஆதரவளிப்பதற்கு சமம். தமிழகத்துக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு செயலாற்றி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நற்பணிகள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு, மன்னார்குடி நகர திமுக செயலாளர் வீரா.கணேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், மதிமுக மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன் மற்றும் 33 வார்டுகளின் திமுக கூட்டணி வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.