Published : 25 Apr 2016 09:00 AM
Last Updated : 25 Apr 2016 09:00 AM
சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மாநில செய லாளர் முத்தரசன் பேசியதாவது:
தமிழகத்தில் 5 முனை போட்டி நிலவுகிறது என்று பத்திரிகைகள் கூறுகின்றன. ஆனால், இங்கு நிலவுவது 2 முனை போட்டிதான். தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணிக்கும், அதிமுக அணிக்கும்தான் தற்போது போட்டி நிலவுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அவர்களது பிரச்சார கூட்டங்களில் அதிமுகவை மட்டுமே விமர்சித்து பேசுகின்றனர். இதேபோல், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது பிரச்சாரக் கூட்டங்களில் திமுகவை மட்டுமே குறி வைத்து பேசுகிறார். இதனால், நாம் மகிழ்ச்சியடையக் கூடாது. திமுக, அதிமுக என இரு கட்சிகளிடையே எழுதப்படாத ஒரு கூட்டணி உள்ளது. திமுகவுக்கு மாற்று அதிமுக, அதிமுகவுக்கு மாற்று திமுக, மற்றவர்களை உள்ளே விடக்கூடாது என்பது தான் அந்த கூட்டணியின் முடிவு. எனவே, இந்த முறை திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணி உருவாகியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி தனது பிரச்சாரத்தில் தோழமை கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று சொல்லியுள்ளார். அவர் ஏதோ மறதியில் சொல்லியிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். அவரும், மாற்றம் வேண்டும் என்கிறார். நாமும் மாற்றம்தான் வேண்டும் என்கிறோம். அவர் கேட்பது அதிமுகவுக்கு பதிலாக திமுக என்னும் மாற்றம். நாம் கேட்பது இருவருமே ஆட்சிக்கு வரக்கூடாது என்னும் மாற்றம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT