Last Updated : 13 Feb, 2022 12:53 PM

 

Published : 13 Feb 2022 12:53 PM
Last Updated : 13 Feb 2022 12:53 PM

கோவை: அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிப்பு குறைபாடு என ஆர்வலர்கள் அச்சம்: உயிரிழந்த புள்ளி மானின் உடலை காக்கைகள் கொத்தித்தின்ற பரிதாபம்

கோவை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் வஉசி உயிரியல் பூங்காவில், உயிரிழந்த புள்ளி மானின் உடலை கொத்தித் தின்னும் காகங்கள். படம்: ஜெ.மனோகரன்

கோவை

கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிப்புக் குறைபாடு உள்ளதாக வனஉயிரின ஆர்வலர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்ட மக்களின் முக்கிய பொழுதுபோக்கு மையங்களில் ஒன்றாக வஉசி உயிரியல் பூங்கா உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தப் பூங்காவில் தற்போதைய நிலையில் பறவையினங்கள், விலங்கினங்கள், ஊர்வனஇனங்கள் என 530-க்கும் மேற்பட்டஉயிரினங்கள் உள்ளன. தினமும்இந்தப் பூங்காவுக்கு ஏராளமான பொது மக்கள் வந்து உயிரினங் களை பார்வையிட்டுச் செல்கின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த பூங்காவுக்கு வரும் பொதுமக்களின் எண் ணிக்கை அதிகளவில் இருக்கும்.

மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமான வஉசி உயிரியல்பூங்கா தற்போதைய கால மாற்றத்துக்கு ஏற்ப மேம்படுத்தப்பட வில்லை. உயிரினங்களை அடைப்பதற்கான இடவசதியை அதிகப்படுத்தி, கூடுதல் எண்ணிக்கை யில் உயிரினங்களை பொதுமக்களுக் காக காட்சிப்படுத்தவில்லை எனவும், பூங்காவை முறையாக பராமரிப்பது இல்லை எனவும் வன உயிரின ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மூன்றுவாரங்களுக்கு முன்னர், கரோனாபரவல் அச்சம் காரணமாக, கோவை வஉசி உயிரியல் பூங்கா மூடப் பட்டது. இதனால் உயிரினங்களை பார்வையிட பொதுமக்கள்அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே, இயற்கை சூழலின்மை, கட்டமைப்பு வசதியில் குறைபாடு போன்ற காரணங்களால், கோவை வஉசி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து உயிரியல் பூங்காவில் முறையாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் பூங்கா வளாகத்தில் புள்ளி மான் குட்டி உயிரிழந்தது கிடந்ததும், அதன் உடலை காகங்கள் கொத்தி தின்ற சம்பவமும் அரங்கேறியது, வன ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுதொடர்பாக வன உயிரினஆர்வலர்கள் கூறும்போது, ‘‘பூங்காவை பொதுமக்கள் பார்வை யிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதே தவிர, ஊழியர்கள் பணியாற்ற வழக்கம் போல் அனுமதியுண்டு. இங்குள்ள ஊழியர்கள் தினமும் காலை, மாலை உயிரினங்களை பார்வையிட்டு கண்காணிப்பதாக கூறுகின்றனர். ஆனால், அது வெறும் வாய் வார்த்தையாகத் தான் உள்ளது. ஏனெனில், பூங்காவில் உள்ள புள்ளி மான்களில் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டி குறைப்பிரசவத்தால் உயிரிழந்துள்ளது.

இதை பூங்கா ஊழியர்கள் சரிவர கவனிக்கவில்லை. முன்பே கவனித்திருந்தால் அது குறைப்பிரசவமாக பிறந்த போதே காப்பாற்ற முயற்சித்திருக்கலாம். உயிரிழந்த குட்டி, தாய் மான் உள்ள வளாகத்திலேயே கிடந்து துர்நாற்றம் வீசி வந்துள்ளது. மேலும், காகங்கள் உள்ளிட்ட வையும் உயிரிழந்த குட்டி மானின் சடலத்தை கொத்தித் தின்று வருகின்றன. நேற்று வரை இந்நிலையே அங்கு உள்ளது. பூங்காவில் உள்ள உயிரினங்களை மாநகராட்சி நிர்வாகத்தினர் முறையாக பராமரிக்க வேண்டும். அங்கீகாரம் ரத்தால், பூங்காவில் பராமரிப்புக் குறைபாடு உள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது,’’ என்றனர்.

இதுதொடர்பாக, உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறும்போது, ‘‘பூங்காவை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட வில்லை. அதேசமயம், உள்ளே உள்ள உயிரினங்கள் வழக்கம் போல் உணவு அளித்து பராமரிக்கப்படுகின்றன. புள்ளி மான்கள் குட்டிஈன்றால், அதை முறையே எடுத்து குறிப்பிட்ட நாட்கள் பராமரிக்கப் படுகின்றன. உயிரிழந்தால் அப்புறப்படுத்தப்படுகின்றன. இதில் எந்த மாற்றமும் இல்லை. இங்குள்ள உயிரினங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றன. அதேபோல், இந்த உயிரியல் பூங்காவை கையகப்படுத்த வனத்துறைக்கு மாநகராட்சி நிர்வாகம் மூலம் வலியு றுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சமீபத்தில் வனத்துறையினர் இங்கு வந்து, பூங்காவில் உள்ள உயிரி னங்கள் குறித்து கணக்கெடுத்துச் சென்றுள்ளனர்,’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x