இலங்கை சிறைகளில் இருந்து 99 மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறைகளில் இருந்து 99 மீனவர்கள் விடுதலை
Updated on
1 min read

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 99 பேரை அந்நாட்டு நீதிமன்றங்கள் நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 7 முறை வெவ்வேறு சிறைபிடிப்புகள் மூலம் ராமநாத புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 49 பேர், புதுக்கோட்டை- 19, நாகப்பட்டினம்- 8, தஞ்சாவூர்- 3, தூத்துக்குடி 20 என மொத்தம் 99 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா, யாழ்ப்பாணம், நீர் கொழும்பு சிறைகளில் அடைத்தனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத் தைச் சேர்ந்த 300 மீனவர்களுக்கு, ரூ.4.5 கோடி மதிப்பிலான 150 படகுகள் மற்றும் மீன்பிடி உபகர ணங்களை இந்தியா சார்பில் வழங்குவதற்கான ஒப்பந்தம், இலங்கைக்கான இந்தியத் தூதர் ஒய்.கே.சின்ஹா மற்றும் இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீர இடையே கொழும்பில் கையெழுத்தானது. அப்போது, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என இந்தியத் தூதர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை சிறைகளில் உள்ள 99 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு பரிந்துரை செய்தது.

விடுதலை செய்யப்பட்ட 99 மீனவர்களும் இந்திய தூதரக அதிகாரிகளின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்பு வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in