Published : 26 Apr 2016 08:39 AM
Last Updated : 26 Apr 2016 08:39 AM

சென்னையில் ரூ.4.72 கோடி பறிமுதல் விவகாரம்: அதிமுக பிரமுகர், மகன்கள், கட்சியினரிடம் தீவிர விசாரணை - வெளியே வீசிய கவர்களில் இருந்தது என்ன?

சென்னை எழும்பூரில் அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.4.72 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுக பிரமுகர், அவரது மகன்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

தஞ்சை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக இருப்பவர் விஜயகுமார். சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள ‘கமாண்டர்ஸ் கோர்ட்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இவருக்கு சொந்தமாக ஒரு வீடு உள்ளது. விஜயகுமாரின் மகன்கள் விஜய் கிருஷ்ணசாமி, ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் இங்கு வசிக்கின்றனர். இந்த வீட்டில், தேர்தல் நடத்தும் அதிகாரி சங்கீதா, வருமான வரித்துறை இணை ஆணையர் சஞ்சய் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை சோதனை நடத்தி ரூ.4 கோடியே 72 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக விஜயகுமார், விஜய் கிருஷ்ணசாமி, ஆனந்த கிருஷ்ணன் ஆகியோரிடம் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை விசாரணை நடந்தது. முன்னதாக, சோதனை நடத்த அதிகாரிகள் சென்றபோது, வீட்டுக்குள் இருந்த விஜய் கிருஷ்ணசாமி சுமார் 20 நிமிடங்கள் கதவை திறக்கவில்லை. இதுகுறித்தும் அதிகாரிகள் விளக்கம் கேட்டனர்.

பெரம்பூர் அருகே திருவிக நகரிலும் விஜயகுமாருக்கு சொந்தமாக ஒரு வீடு உள்ளது. அங்கும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய சோதனை நேற்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது.

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலர் அங்கு வந்து சென்றது தெரியவந்தது. இந்த பணத்துக்கும், அவர் களுக்குமான தொடர்பு குறித்து விஜயகுமார் மற்றும் அவரது மகன்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களிடம் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், விஜயகு மாரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண் டிருந்தபோது ஜன்னல் வழி யாக 2 கவர்கள் வெளியே வீசப்பட்டுள்ளன. அந்த கவர்களை அதிகாரிகள் கண்டுபிடித்து எடுத்துவிட்டனர். வீட்டில் கோடிக் கணக்கில் பணம் இருந்த நிலையில் 2 கவர்களை மட்டும் வெளியே வீசக் காரணம் என்ன? அதில் என்ன இருந்தது என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், இதுதொடர்பாக எந்த தகவலையும் கூற அதிகாரிகள் மறுத்துவிட்டனர். ‘தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்த பிறகே தகவல்களை வெளியிட முடியும்’ என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x