வால்பாறை: தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து

வால்பாறை: தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து
Updated on
1 min read

வால்பாறை அருகே தேயிலை தொழிலாளர்கள் குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில், 4 வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மாணிக்கா எஸ்டேட்டிலுள்ள செங்குத்துப்பாறை தொழிலாளர்கள் குடியிருப்பில் 6 வீடுகள் உள்ளன. இங்கு, நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் ஜோதிவேல் (55) என்பவரின் வீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 6 வீடுகளும் இருந்ததால், தீ வேகமாக மற்ற வீடுகளுக்கும் பரவியது. இதில் பார்வதி (60), சிவகாமி (45), ஜெயகலா (47) ஆகியோரின் வீடுகளும் தீப்பற்றி எரிந்தன.

வீட்டில் உறங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள், தீப்பிடித்து எரிவதை கண்டு குழந்தைகளுடன் வெளியே ஓடி உயிர் தப்பியுள்ளனர். தகவலறிந்து எஸ்டேட் நிர்வாகத்தினர் டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வால்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் தங்கராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சென்று, மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதுகுறித்து வால்பாறை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in