

தூத்துக்குடி மாநகராட்சி 39-வது வார்டில் பாஜக சார்பில் மத்திய அரசுவழக்கறிஞரும், மாவட்ட பாஜக பொருளாளருமான சண்முக சுந்தரத்தின் மனைவி உஷாதேவி போட்டியிடுகிறார். இவர் வார்டு முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று காலை தூத்துக்குடி சிவன் கோயில் முன்பு இருந்துபிரச்சாரத்தை தொடங்கினார். உஷாதேவி தனது வாக்குறுதிகளை 20 ரூபாய் பத்திரத்தில் உறுதிமொழியாக எழுதி, அந்த பத்திரத்தை வீடு வீடாக வழங்கி வாக்கு சேகரித்தார்.
அந்த உறுதிமொழி பத்திரத்தில், 'என் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை. நான் கவுன்சிலராக தேர்வுசெய்யப்பட்டால், ரேஷன் கடைகளில் அனைவருக்கும், அனைத்துபொருட்களும் உரிய முறையில் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். யாரிடமும் கமிஷன் பெற மாட்டேன். தங்கள் வீட்டில் நடைபெறும் கட்டுமான வேலைகள் சம்பந்தமாகவோ, கழிவுநீர், குடிநீர் சம்பந்தமாகவோ எந்த வேலை வந்தாலும் பணம் பெற மாட்டேன்.பொதுமக்களை அச்சுறுத்தும்வகையில் எந்த கட்டப்பஞ்சாயத்தும், தேவையில்லாத ஆடம்பரமும் செய்ய மாட்டேன். பொதுமக்களை ஏமாற்றி பணம் பெறமாட்டேன். என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். அனைத்து அரசு சேவைகளும் இலவசமாக செய்து கொடுப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.