Published : 12 Feb 2022 09:24 AM
Last Updated : 12 Feb 2022 09:24 AM

தனியார் கல்வி கொள்ளையை நீட் உடைத்துள்ளது: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து

தனியார் கல்லூரிகளில் கல்வி கொள்ளையை நீட் உடைத்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 35 வார்டுகளில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. இவர்களை ஆதரித்து வேலூர் மண்டித் தெருவில் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் பிரச்சாரம் நேற்று நடைபெற்றது.

இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசும்போது, ‘‘திமுக ஆட்சியில் அளித்த பொங்கல் பரிசில் மஞ்சள் தூளுக்கு பதிலாக மரத்தூளையும், மிளகுக்கு பதிலாக பருத்தி கொட்டையும், வெல்லத்தை பாக்கெட்டில் கொண்டு வந்தோம். பொங்கல் பரிசை சாப்பிட்டு தப்பித்து வந்துவிட்டோம்.

முந்தைய திமுக ஆட்சி காலத்தில் மட்டும் சுமார் 14 தனியார் மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்த தனியார் கல்லூரிகளில் கல்வி கொள்ளையை நீட் உடைத் துள்ளது. திமுக கதை, திரைக் கதை எழுதி நாடகம் அமைத்து ஆட்சிக்கு வந்தும் நாடகம் ஆடக் கூடியவர்கள்.

திமுக எதிர்கட்சியாக இருந்த போது கரோனா தடுப்பூசி குறித்து விமர்சனம் செய்தவர் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின். வேட்பு மனுவை வாபஸ் வாங்காத பாஜக வேட்பாளர்களின் வீடுகள் முன்பு பள்ளம் தோண்டப்படுகிறது. தண்ணீர் நிறுத்தப்படுகிறது. இதை எதிர்த்து பேசினால் எங்கள் மீது குண்டு போடுகிறார்கள்.

நீங்கள் ஹெலிகாப்டரில் வந்து குண்டு போட்டாலும் நாங்கள் கொள்கையில் இருந்து துளியும் மாற மாட்டோம். தமிழகத்தில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல் ஒரே தேரத்தில் நடைபெறுவது என்பது அவர்கள் கையில்தான் உள்ளது. அவர்களின் ஆட்சியை பொறுத்தது’’ என்றார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது மேடைக்கு எதிரே இருந்த நடிகர் கமல்ஹாசனின் பேனரைப் பார்த்து ‘இவர் ஒன்று சினிமாவில் இருக்க வேண்டும் அல்லது அரசியலில் இருக்க வேண்டும். நடுவில் இருப்பது அரசியலுக்கு நல்லதில்லை’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x