

தஞ்சாவூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜக மாநில முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி வாணக்காரத் தெருவில் இன்று காலை பிரச்சாரம் செய்த அவர் பேசியது: "இது சவால் நிறைந்த தேர்தல். செல்லுமிடமெல்லாம் மக்கள் ஆர்வமாகக் கூடி வருவது மட்டுமல்லாமல், பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க முனைப்புடன் பணியாற்றி உள்ளனர். எனவே, இந்தத் தேர்தல் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தமிழகத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் வகையில் இந்தத் தேர்தலை பாஜக சந்தித்து வருகிறது.
அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், குடிநீர், சமையல் எரிவாயு, திருமண நிதி உதவி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வெகுமதி உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் நிறைவேற்றி வருகிறார். தஞ்சாவூர் மாநகரில் பிரதமரின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்பாட்டு பணிக்காக ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த அளவுக்குப் பணிகள் சிறப்பாக நடைபெறவில்லை. இதை சரிசெய்யும் வகையில் மாமன்றத்தை அலங்கரிக்க வேண்டுமானால், பாஜக வெற்றி பெற வேண்டும் .
உதயநிதி ஸ்டாலின் தான் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் என்பதை உணர வேண்டும். தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது நகைக்கடனைத் தள்ளுபடி செய்யுமாறு கோரிய பெண்ணை மிக மோசமான விமர்சனம் செய்துள்ளார். இதற்காக உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்றார் பொன் ராதாகிருஷ்ணன்.
முன்னதாக, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பிரச்சாரம் செய்த அவர், குப்பைகளை கூட்டி தூய்மை பணியில் ஈடுபட்டார்.