

அதிமுகவின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேளுங்கள் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கட்சியினரிடம் அறிவுறுத்தினார்.
விருதுநகர் நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:
விருதுநகர் மக்களின் நீண்ட நாள் கனவான அரசு மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு பங்களிப்புடன் ரூ.380 கோடியில் கட்டி முடித்து திறக்கப்பட்டுள்ளது.
ரூ.444 கோடியில் விருதுநகருக்கு தனியாக தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆட்சி மாறலாம், காட்சி மாறலாம். ஆனால் நாம் கொண்டு வந்த நலத் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியது நமது கடமை. ஆடம்பரம், அராஜகம், ரவுடியிசம் ஆகியவற்றை மக்கள் விரும்ப மாட்டார்கள். அமைதியாக வீடுவீடாகச் சென்று அதிமுகவின் சாதனை களைச் சொல்லி வாக்கு கேளுங்கள். இது அதிமுகவின் வெற்றித் தேர்தலாக இருக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜவர்மன், சந்திரபிரபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.