Published : 10 Feb 2022 03:37 PM
Last Updated : 10 Feb 2022 03:37 PM

பிரதமர் மோடியின் உரையை தமிழக கோயில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை: உயர் நீதிமன்றம்

சென்னை: ஆதிசங்கரர் சிலை திறப்பு விழா நிகழ்வில் பேசிய பிரதமர் மோடியின் உரையை தமிழக கோயில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், ’பிரதமர் மோடி கேதர்நாத் கோயிலில் நடத்திய ஆதிசங்கரர் பூஜை, தமிழகத்தில் உள்ள 16 கோயில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதற்காக கோயில் நிதி பயன்படுத்தப்பட்டது. மரபு மற்றும் மதம் சாராத நிகழ்வுகளுக்கு கோயிலில் அனுமதியளிக்க கூடாது. கோயில் வளாகங்களில் உள்ளே வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். கோயில்களில் தின்பண்டங்கள் விற்க தடை விதிக்க வேண்டும். கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாள், கூட்டங்கள் நடத்தப்படுகின்றன’ என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ’உத்தராகண்ட் மாநிலம், கேதர்நாத்தில் பிரதமர் நதேந்திர மோடி, ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்து உரையாற்றிய நிகழ்ச்சி, இந்து சமய அறநிலைய சட்ட விதிகளை மீறி, தமிழகத்தில் உள்ள 16 கோயில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக கோயில் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் தொல்லியல் துறை கண்காட்சி நடத்தியனர்’ என்று மனுதாரர் குற்றம்சாட்டினார். அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ’தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கண்காட்சி நடத்துவது தவறு அல்ல. இந்திய அரசு உத்தரவின்படி பிரதமர் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது, அது அரசியல் சார்ந்தது அல்ல. மதம் சார்ந்த ஆன்மிக நிகழ்ச்சிதான். அறநிலைய துறை எந்த விதிகளையும் மீறவில்லை’ என விளக்கமளித்தார்.

தமிழக கோயில்களில் அரசியல் நிகழ்ச்சிகளை அனுமதிப்பதில்லை என்ற அரசுத் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட கோயில்களில், தொல்லியல் துறை கண்காட்சி நடத்தியதை அரசியல் நிகழ்ச்சியாக கருத முடியாது என உத்தரவிட்டனர். பிரதமரின் நிகழ்ச்சியை பொறுத்தவரை, அவரது பேச்சு முழுவதும் ஆதி சங்கரர் பற்றிதான் இருந்துள்ளது எனக் கூறிய நீதிபதிகள், பிரதமரின் பேச்சின் சாராம்சத்தை முழுமையாக புரிந்துகொள்ளாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதேபோல ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை போன்ற கோயில் வளாகங்களின் உள்ளே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பான உரிய ஆதாரங்களையும், புகைப்படங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர். கோயில் வளாகத்தில் பிரசாதம் விநியோகிப்பதில் தவறில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், உணவுப்பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தி, வழக்கு குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x