

பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என்ற நிலைக்கு மக்கள் பலியாக கூடாது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் மே 16-ம் தேதி நடக்கவுள்ளது. இந்த தேர்தல் ஜனநாயகத் தேர்தலா அல்லது பணநாயகத் தேர்தலா என்று கேட்கும் அளவுக்கு ஆங்காங்கே தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையினராலும் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றி வருகிறது.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தல் ஆணையம் இதை தடுக்காமல் மெத்தனம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பிடிபட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டதா என தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். வாக்காளர்களே இந்த சிறு தொகைக்காக 5 ஆண்டு காலம் ஆட்சியை, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்குப் பதிலாக உங்களை விற்றுக் கொள்ளாதீர்கள். பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என்ற நிலைக்கு மக்கள் பலியாக கூடாது'' என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.