நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது: ராமேசுவரம் மீனவர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது: ராமேசுவரம் மீனவர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு
Updated on
1 min read

ராமேசுவரம்: தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளை சிறை பிடித்து 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில்இருந்து திங்கட்கிழமை 500-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மூன்று விசைப்படகுகளையும், அதிலிருந்த 11 மீனவர்களையும் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 11 பேரும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிப்ரவரி 22-ம் தேதி வரையிலும் நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் 18-ம் தேதி ராமேசு வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 43 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த மீனவர்களை கடந்த ஜனவரி 25-ம் தேதி இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது. மீனவர்களில் பலருக்கு கரோனா பாதிக்கப்பட்டு இருந்ததால் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை. மேலும், கடந்த வாரம் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மற்றும் காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரிமேட்டைச் சேர்ந்த 21 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் மீனவ சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மீனவர் கள் சிறைபிடிப்பைக் கண்டித்தும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை தாயகம் திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று (புதன்) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குவதாகவும், வெள்ளிக்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

மேலும், நாட்டுப்படகு மீனவ சங்கத் தலைவர் ராயப்பன் தலைமையில் ராமேசுவரம் மீனவர்கள் சிறைபிடிப்பு மற்றும் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதைக் கண்டித்து பாம்பன் கடற்கரையில் நேற்று கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in