Published : 10 Apr 2016 10:39 AM
Last Updated : 10 Apr 2016 10:39 AM
கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் முன்னாள் எம்எல்ஏ வெள்ளியணை வி.ராமநாதன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நகரத் தலைவர் கே.சுப்பன், மாவட்டப் பொருளாளர் சி.சுப்பிரமணி, கரூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் எஸ்.ஜெகதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை என்பதால், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை இழிவாகப் பேசிய மாநில செய்தித் தொடர்பாளர் ஜோதிமணியை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. ஜோதிமணியை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து பிரச்சாரம்
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திமுகவுக்கு ஜோதிமணி பிரச்சாரம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து ஜோதிமணியிடம் கேட்டபோது, “மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போனில் தொடர்புகொண்டார். அரவக்குறிச்சி தொகுதியைப் பெற்றுத்தர முயற்சிப்பதாக தெரிவித்தார். அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரத்தை தொடர்ந்து வருகிறேன்” என்றார்.
அரவக்குறிச்சி வட்டார காங்கிரஸ், உங்களைக் கண்டித்துள்ளதே என்று அவரிடம் கேட்டதற்கு, “அரவக்குறிச்சி வட்டார காங்கிரஸில் 10 பேர் மட்டும்தான் உள்ளனரா?” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT