Published : 28 Apr 2016 08:49 AM
Last Updated : 28 Apr 2016 08:49 AM

ம.ந.கூட்டணி தேர்தல் அறிக்கை: சென்னையில் இன்று வெளியீடு

மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச் செயலாளரும் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ சென்னையில் இன்று வெளியிடுகிறார்.

மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கத்தை கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கின. இந்தக் கூட்டியக்கம், மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தேர்தல் அணியாக உருவானது. அப்போதே குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை வெளியிட்டனர்.

பின்னர், மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளும் இணைந்து பலமான 3-வது அணியை உருவாக்கியுள்ளன. தேமுதிக, தமாகா கட்சிகள் ஏற்கெனவே தங்கள் தேர்தல் அறிக்கையை தனித்தனியாக வெளியிட்டுள்ளன. இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை வைகோ வெளியிடுகிறார்.

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

ம.ந.கூட்டணியின் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஊழல் சொத்துகள் பறிமுதல், இலவச கல்வி, உள்ளிட்ட அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x