

சென்னை: சிறந்த மென்பொருள் தயாரிப்புக்கான ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’க்கு விண்ணப்பிக்கக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த மென்பொருளை உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.1 லட்சம் மற்றும் ஒரு பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படும்.
அதன்படி, 2021-ம் ஆண்டுக்காக விருதுக்குத் தனிநபர் மற்றும் நிறுவனத்திடமிருந்து மென்பொருள் வரவேற்கப்படுகிறது. விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருட்கள் 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
விருதுக்கான விண்ணப்பத்தை www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வரும் 31-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்ற தமிழ் வளர்ச்சித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வராததால், விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பிப்.28-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 044-28190412, 28190413 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.