

சென்னை: வி.கே.சசிகலா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தொடர் மழை, மூலப் பொருட்களின் விலையேற்றம், 18 சதவீத வரி போன்ற காரணங்களால் தீப்பெட்டித் தொழில் நலிவடைந்து வருகிறது.
இந்நிலையில், மத்திய பட்ஜெடில் தீப்பெட்டி உற்பத்திக்கு எவ்வித வரிச் சலுகையும் அளிக்கப்படவில்லை. மேலும், வெளிநாடுகளுக்கு தீப்பெட்டி ஏற்றுமதி செய்யும்போது வழங்கப்படும் ஊக்கத்தொகையை 7 சதவீதத்திலிருந்து 1.5 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. அதேபோல, இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களுக்கான வரி 3 முதல் 4 மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால் உற்பத்திக்கான அடக்கவிலை உயர்ந்துவிட்டபோதும், விற்பனை விலை அதிகரிக்கவில்லை. எனவே, அதிக நஷ்டம் ஏற்படுவதாக உற்பத்தியாளர்கள் வேதனைப்படுகின்றனர்.
எனவே, தமிழகத்தில் தீப்பெட்டி தொழில் அழிந்துவிடாமல் தடுக்கவும், இதில் ஈடுபட்டு வரும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டும், வரிச் சலுகை வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.