Published : 08 Feb 2022 08:20 AM
Last Updated : 08 Feb 2022 08:20 AM

ஆதரவை திரும்ப பெற முடிவு செய்திருந்த பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் சமரசம்: புதுவையில் மக்கள் நலப்பணிகள் எதுவும் நடக்கவில்லை என ஆதங்கம்

புதுச்சேரி: ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்த பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் பேரவைத்தலைவரை சந்தித்து முறையிட்டனர். அவர்களை அவர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற 6 சுயேச்சை எம்எல்ஏக்களில் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் தாமாக முன்வந்து எந்தவித நிபந்தனையுமின்றி பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர். அரசுக்கு ஆதரவளித்து கடிதம்,அளித்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு வாரிய பதவி கிடைக்கும் என நம்பியிருந்தனர்.

நஷ்டத்தில் இயங்குவதால் வாரிய பதவி வழங்க முடியாது, என முதல்வர் ரங்கசாமி சமீபத்தில் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

என்ஆர் காங்கிரஸ், பாஜக, ஆதரவு எம்எல்ஏக்கள் இடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியது. தங்கள் அதிருப்தியை வெளிப் படுத்தும் விதமாக அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்ப பெற பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் முடிவு செய்தனர். அவர்களை பாஜக நிர்வாகிகள் சமரசப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.

இருப்பினும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் சட்டப்பேரவைக்கு வந்தனர். பேரவைத்தலைவர் இல்லாததால் அவருக்காக காத்திருந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், “பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதனால்தான் நாங்களாக முன்வந்து பாஜகவுக்கு ஆதரவு அளித்தோம். ஆனால் மக்கள் எதிர்பார்க்கும் எந்த பணியும் புதுச்சேரி அரசிடம் நடைபெறவில்லை. இது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதுதொடர்பாக பலமுறை அரசை அணுகியும் எந்த பயனும் இல்லை.

பாஜகவுக்கு ஆதரவு அளித்திருப்பதால், ஆட்சியா ளர்கள் எங்கள் மீது பாரபட்சம் காட்டுகிறார்களோ என்ற சந்தேகம் நிலவுகிறது. வாரியத் தலைவர் பதவி பிரச்சினை அல்ல.

அதை பாஜக மூலம் பெற்றுவிட முடியும். மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளோம். மத்திய அரசு திட்டங்களை வழங்கத் தயாராக உள்ளது. புதுவை அரசு அதனைப் பெற்று செயல்படுத்தாமல் உள்ளதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அரசுத் துறைகளில் கோரிக்கை மனு தந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியும் தரவில்லை. எம்எல்ஏ அலுவலகங்களுக்கு தரப்பட்ட மடிக்கணினி, ஐபோன், மேஜை நாற்காலி கூட எங்களுக்கு தரவில்லை” என்றனர்.

அதைத்தொடர்ந்து பேரவைத் தலைவர் செல்வம் அங்கு வந்தவுடன் அவரது அறையில் சுயேச்சை எம்எல்ஏக்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். பேரவைத்தலைவரின் சமாதானத் துக்குப் பிறகு எதிர்ப்பு தெரிவித்த சுயேச்சை எம்எல்ஏக்கள் அங்கி ருந்து புறப்பட்டனர்.

தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாகவே செயல்பட முடிவு எடுத்துள்ளதாக குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x