நித்யானந்தா வீடியோ விவகாரம் | ரஞ்சிதா தொடர்ந்த வழக்கில் நேரடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

நித்யானந்தா வீடியோ விவகாரம் | ரஞ்சிதா தொடர்ந்த வழக்கில் நேரடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

சென்னை: நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருந்தது போன்ற வீடியோ காட்சி வெளியான விவகாரம் தொடர்பான வழக்கில் மறு விசாரணை நடத்தக் கோரி நடிகை ரஞ்சிதா தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 16-க்கு தள்ளி வைத்துள்ளது.

பிடதி ஆசிரம தலைவர் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்தது போன்ற வீடியோவை தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. நவீன தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்ட வீடியோ காட்சியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டுவதாக, நித்யானந்தா தியான பீட நிர்வாகி சென்னை காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் லெனின், ஐயப்பன், மற்றும் பெண் ஒருவர் உள்பட பலர் மீது சி.பி.சி.ஐ.டி. பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை சைதாப்பேட்டை 11-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை மறு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும், பெண் ஒருவர், பரத்வாஜ் இடையே நடந்த இ-மெயில் உரையாடலையும், கர்நாடக மாநில அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வீடியோ கேசட் குறித்தும் மீண்டும் விசாரிக்கக் கோரியும் நடிகை ரஞ்சிதா மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ரஞ்சிதா தரப்பில் இந்த வழக்கை நேரடி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, நேரடி விசாரணைக்கு அனுமதித்து, வழக்கை விசாரணையை பிப்ரவரி 16-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in