பெத்தேல் நகரில் 30 ஆண்டுகளாக வாழும் மக்களை ஒரே இரவில் வெளியேற்ற நினைப்பதா? - தினகரன்

டிடிவி தினகரன் | கோப்புப் படம்.
டிடிவி தினகரன் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: "பெத்தேல் நகர் மக்களை ஒரே இரவில் வேரோடு பிடுங்கி வெளியேற்ற நினைப்பதா?" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "சென்னை கிழக்கு கடற்கரை சாலை பெத்தேல் நகரில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தமிழக அரசு பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் பல்வேறு துறைகளுக்கு தெரிந்து அங்கே வசித்துவரும் மக்களை ஒரே நாள் இரவில் வேரோடு பிடுங்கி வெளியேற்ற நினைப்பது சரியானதல்ல என்பதை உணர்ந்து இவ்விவகாரத்தைக் கையாளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள பெத்தேல் நகரில் உள்ள வணிக மற்றும் குடியிருப்பு சார்ந்த ஆக்கிரமிப்பை அகற்றும்படி கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி ஐ.ஹெச்.சேகர் என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாரபட்சமின்றி பெத்தேல் நகர் குடியிருப்புகளில் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டது.

மின் இணைப்பைத் துண்டிக்க தமிழக அரசு கால அவகாசம் கேட்டுள்ளது. மேலும், மக்கள் தங்கள் குடியிருப்புகளை காலிசெய்வதாக உத்தரவாதம் அளித்தால் மாற்று இடம் வழங்க பரிசீலிக்கப்படும் என்று அரசு தெரிவித்தது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அப்பகுதியில் மக்கள் பேராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in