Published : 15 Jun 2014 04:25 PM
Last Updated : 15 Jun 2014 04:25 PM

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

ராமேஸ்வரம் விசைப் படகு மீனவர்களின் ஒரு வார தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்று கடலுக்குச் செல்கின்றார்கள்.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இந்திய எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தாக கூறி 26 விசைப்படகுகளை கைப்பற்றி 101 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீனவர்கள் கடந்த திங்கட்கிழமையிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய எழுதிய கடிதங்கைளை தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை அதிபர் ராஜபக்சே விடுதலை செய்ய உத்திரவிட்டார். ஆனால் இலங்கை நீதிமன்றங்கள் தமிழக மீனவர்களின் 26 விசைப்படகுகளை பறிமுதல் செய்தது.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்பிய நிலையிலும் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி தங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை மீனவர்கள் தொடர்ச்சியாக நடத்தி வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக புதன்கிழமை வேர்க்கோடு தேவாலயத்திலிருந்து வட்டாச்சியர் அலுவலகம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் வாயில் கருப்புத் துணியை கட்டி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டப் போராட்டத்தையும் நடத்தினர்.

இந்த நிலையில், சனிக்கிழமை சென்னையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை பா.ஜ.க. அலுவலகத்தில் ராமேஸ்வரம் மீனவப் பிரநிதிகள் சந்தித்து, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் சம்பவத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், பிடிபட்ட படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மீனவப் பிரநிதிகளிடம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீனவர்களின் விசைப்படகுகளை திரும்ப பெறுவதற்கு மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்ததன் பேரில் மீனவர்கள் தங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்று திங்கட்கிழமையிலிருந்து கடலுக்குச் செல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x