Published : 06 Feb 2022 05:07 AM
Last Updated : 06 Feb 2022 05:07 AM

சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஊழியர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஊழியர்கள் மீதுசட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1980-ம் ஆண்டு திருச்சிமாவட்ட ஆட்சியரால் கண்ணம்மாள் என்பவர் இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்டார். 1981-ல் அவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 2005-ல் அவர் ஓய்வுபெற்ற போதும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் பணி வரன்முறை செய்யப்பட்ட போதும், பணியாற்றிய காலத்துக்கான ஊதிய உயர்வு, ஊதிய பாக்கியை தர மறுத்து பள்ளிக்கல்வித் துறை 2008-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கண்ணம்மாள் வழக்குதொடர்ந்தார். நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது.

தவறுதலாக அவரது பெயர்தமிழ் ஆசிரியருக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டதால் ஊதிய உயர்வு பெற அவருக்கு தகுதியில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:

இளநிலை உதவியாளர், தமிழ்ஆசிரியர் போன்ற பதவிகள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நியமிக்கப்பட வேண்டியவை. கல்வித் தகுதியை ஆராயாமல் மனுதாரரை தமிழ் ஆசிரியராக நியமித்து 23 ஆண்டுகளாக அவரைபணியில் நீட்டிக்க அனுமதித்ததே சட்டவிரோதம். எனவே, ஊதிய உயர்வு, ஊதிய பாக்கியை தர மறுத்து பள்ளிக்கல்வித் துறைபிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது என்பதால் மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

இதேபோல சட்டவிரோதமாகநியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஊழியர்கள் பணியில் நீடிப்பதை மறுஆய்வு செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் நேரம்வந்துவிட்டது. இதுதொடர்பாக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x