

ஜீவஜோதி மற்றும் அவரது கணவர் மீதான கொலை மிரட்டல் வழக்கை 3 மாதங்களில் விசாரித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு வேதாரண்யம் போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த வேதராசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘சரவணபவன் ராஜகோபால் வழக்கில் தொடர்புடைய ஜீவஜோதியின் கணவர் தண்டபாணி, என்னிடம் சொத்து கிரய ஒப்பந்தம் செய்து ரூ.10 லட்சம் கடனாகப் பெற்றார்.
கொலை மிரட்டல்
கடந்த 2019 ஜனவரி 9-ம் தேதி என் வீட்டுக்கு ஜீவஜோதி, அவரது கணவர் தண்டபாணி, தண்டபாணியின் மூத்த சகோதரிபாக்கியலட்சுமி, பாக்கியலட்சுமியின் கணவர் ஆகியோர் அடியாட்களுடன் வந்து, என்னிடம் உள்ளபத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை திருப்பிக் கேட்டனர்.
ஒருகட்டத்தில் என்னைத் தாக்கிவிட்டு, அந்த ஆவணங்களை எடுத்துச் சென்றனர். எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இதுதொடர்பாக நான் அளித்தபுகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸார், ஜீவஜோதி உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.
எனவே, ஜீவஜோதி மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் மீதான வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு வேதாரண்யம் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.முருகபாரதி ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கை 3 மாதங்களில் விசாரித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு வேதாரண்யம் போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.