

சென்னை: சென்னை மெரினாவில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலையை பராமரிக்கும் பொறுப்பு செய்தித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
‘ஜெயலலிதா வளாகம்’
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிச. 5-ம் தேதிமறைந்தார். சென்னை காமராஜர்சாலையில், உயர்கல்வி மன்றவளாகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜெயலலிதாவின் சிலை நிறுவப்பட்டது. அத்துடன், அந்த வளாகம் ‘ஜெயலலிதா வளாகம்’ என்று பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.
இதற்கிடையில், ஜெயலலிதா பிறந்த நாளில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அரசு விழாவாக கொண்டாட கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அந்த சிலைபராமரிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை அதிமுக வைத்தது.
அரசாணை வெளியீடு
இந்நிலையில், தற்போது ஜெயலலிதா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதா சிலையை செய்தித் துறை வசம் எடுத்து, சிலையின் நிர்வாகப் பொறுப்பை செய்தித் துறை இயக்குநர் வசம் ஒப்படைக்கலாம் என அரசு முடிவெடுத்து அதற்கான அரசாணைவெளியிடப்பட்டுள்ளது.
செய்தித் துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மற்ற சிலைகளின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது போலவே, இந்த சிலையின் தொடர்பராமரிப்பு பணிகளை பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளவும் அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.