Published : 05 Feb 2022 10:47 AM
Last Updated : 05 Feb 2022 10:47 AM

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் ஏஜென்டுகளாக ஆளுநர்கள் செயல்படுகிறார்கள்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

மத்தியில் பாஜக ஆட்சி வந்த பிறகு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மத்திய அரசின் ஒற்றர்களாகவும், ஏஜென்டுகளாகவும் செயல்படுவது தெளிவாக தெரிகிறது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

2014-ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பைப் வெடிகுண்டு வழக்கில் குற்றம்சுமத்தப்பட்ட 6 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு நேற்று தண்டனை வழங்கப்பட்டது.

இத்தீர்ப்பையடுத்து, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாட்டில் தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். அமைதியாக நாடு இருக்க வேண்டும். தீவிரவாத கும்பலுக்கு இடமில்லை. தீவிரவாதிகளுக்கும், தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கும் நீதிமன்ற தீர்ப்பு ஒரு படிப்பினையாக அமையும்” என்று கூறினார்.

மேலும் நீட் மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக பேசிய நாராயணசாமி, “நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் விரோதமானது. தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு, அனுப்பப்பட்ட மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாதது தவறு. தமிழக ஆளுநர் தன் கடமையை மீறியுள்ளார்.

மசோதாவை திருப்பி அனுப்ப அதிகாரம் உள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். மாநிலங்களை பொருத்தவரை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை, ஆளுநர் விளக்கம் கேட்கலாமே தவிர, திருப்பி அனுப்பும் அதிகாரம் இல்லை. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தப் பிறகு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மத்திய அரசின் ஒற்றர்களாகவும், ஏஜென்டுகளாகவும் செயல்படுகிறார்கள். அது இப்போது தெளிவாக தெரிகிறது” என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x