தமிழகத்தில் கரோனா படிப்படியாக குறைந்து வருகிறது; இன்னும் 2 வாரம் மிகக் கவனமுடன் இருக்க வேண்டும்: பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை செயலர் வேண்டுகோள்

தமிழகத்தில் கரோனா படிப்படியாக குறைந்து வருகிறது; இன்னும் 2 வாரம் மிகக் கவனமுடன் இருக்க வேண்டும்: பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை செயலர் வேண்டுகோள்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், பொதுமக்கள் இன்னும் 2 வாரம் மிகக் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டதையொட்டி, சென்னை அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். மாநகர நல அலுவலர் ஜெகதீசன், முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ், தலைமையாசிரியர் ரா.சி சரஸ்வதி ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறிய தாவது: தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆனாலும், பொதுமக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கையான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் போன்ற கரோனா சார்ந்த பழக்க வழக்கங்களை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மாணவர்களின் நலன் கருதிவழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில், சுகாதார அலுவலர்கள், மாநகராட்சி, மாவட்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பள்ளியின் நுழைவு வாயிலில், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் கருவி, கிருமிநாசினி வைக்கப்பட்டு, முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கி, சமூக இடைவெளியைக் கடைபிடித்து வகுப்பறைகளில் மாணவர்கள் அமர்ந்து உள்ளனர்.

மாணவர்கள் அல்லது அவர்களது வீடுகளில் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்குவருவதைத் தவிர்த்து, உடனடியாகமருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அதேபோல் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து மணவர்கள் பள்ளிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்.

தமிழகத்தில் மொத்தம் 33.46 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை 77.83சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 2 லட்சத்து 53,372 மாணவர்களில் 1 லட்சத்து 86,275 மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அடுத்துவரும் 2 வாரங்கள் பொதுமக்கள் மிகக் கவனமுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் முந்தைய நாளை விட நோய் தொற்று குறைந்து வருகிறது. தற்போது, 1,031 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 4 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

அடுத்த 2 வாரமும் இதே அளவுஒத்துழைப்போடு, விதிமுறைகளையும் பொதுமக்கள் முறையாகப் பின்பற்றினால், கரோனாவை ஒழித்து விடலாம். இடவசதி இல்லாத பள்ளிகளில் தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in