சக்கர நாற்காலியில் தற்கொலை எண்ணத்துடன் வந்த மூதாட்டியை காப்பாற்றிய போலீஸார்: மாநகர காவல் கூடுதல் ஆணையர் பாராட்டு

சக்கர நாற்காலியில் தற்கொலை எண்ணத்துடன் வந்த மூதாட்டியை காப்பாற்றிய போலீஸார்: மாநகர காவல் கூடுதல் ஆணையர் பாராட்டு
Updated on
1 min read

சென்னை: தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் சக்கர நாற்காலியில் வந்த 70 வயது மூதாட்டியை போக்குவரத்து போலீஸார் தடுத்து நிறுத்தி காப்பாற்றியுள்ளனர். அவர்களை நேரில் அழைத்து காவல் கூடுதல் ஆணையர் பாராட்டியுள்ளார்.

எண்ணூர் விரைவு சாலை, எஸ்.என்.செட்டி சோதனைச்சாவடி அருகே புதுவண்ணாரப்பேட்டை போக்குவரத்து காவலர்கள் வாகனத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிறப்பு உதவி ஆய்வாளர் குருதேவ், தலைமைக் காவலர் ராமகோவிந்தன் ஆகியோர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலிருந்தனர்.

அப்போது சற்று தூரத்தில் கடற்கரை ஓரம் உள்ள சாலையில் சக்கர நாற்காலியில் மூதாட்டி ஒருவர் தனியாக இருப்பதை கண்டு இருவரும் மூதாட்டியிடம் விசாரித்தனர். மேலும், இச்சாலையில் கண்டெய்னர் லாரி மற்றம் கனரக வாகனங்கள் வேகமாக செல்வதால், ஏன் தனியாக வந்தீர்கள், உதவிக்கு யாரும் வரவில்லையா என கேட்டபோது மூதாட்டி விரக்தியில் பதில் ஏதும் கூறாமல் மவுனமாக இருந்தார்.

எனினும் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் இருவரும் சுமார் அரை மணி நேரம் மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்து அவருக்கு ஆறுதல் கூறி விசாரணை செய்தனர். அவரது பெயர் ஜானகி அம்மாள் (70), திருவொற்றியூரில் வசித்த வந்த நிலையில் அவரது கணவர் மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று இறந்து விட்டார். அதன்பிறகு அவரால் நடக்க முடியாமல் போனதால் சர்க்கர நாற்காலியில் தஞ்சமடைந்தார்.

இந்தநிலையில் இவரது 6 மகன்களும் உறவினர்கள் மூதாட்டியை சரிவர கவனிக்கவில்லை என்றும் இதனால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் கடற்கரை சாலையில் தனியாக வந்தாகவும் தெரிவித்துள்ளார்.

மகனுக்கு அறிவுரை

இதையடுத்து போக்குவரத்து போலீஸார் இதுகுறித்து திருவொற்றியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் தெரிவித்து, மூதாட்டியின் மகனான விஸ்வநாதன் என்பவரை வரவழைத்து, வயதான தாயை நன்கு கவனித்துக் கொள்ளும்படி அறிவுரைகள் கூறியதுடன் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

பணியின்போது விழிப்போடு செயல்பட்டு மூதாட்டியை காப்பாற்றிய இரு போக்குவரத்து போலீஸாருக்கும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சார்பில், காவல் கூடுதல் ஆணையர் லோகநாதன் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in