Published : 02 Feb 2022 09:43 AM
Last Updated : 02 Feb 2022 09:43 AM

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் ‘ஹலோ சீனியர்’ காவல் உதவி எண் மூலம் 20 புகார்களுக்கு உடனடித் தீர்வு: முதியவர்கள் தொடர்பு கொண்டு புகார் தரலாம்

முதியவர்களுக்கான ‘ஹலோ சீனியர்’ காவல் உதவி எண் மூலம் கடலூர் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் 20 புகார்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டுள்ளது

முதியோரின் நலன் காக்க ‘ஹலோ சீனியர்’ (82200 09557) என்ற காவல் உதவி எண்ணை கடலூர் மாவட்ட காவல்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் முதியோரின் புகார்கள் காவல் உதவி எண்ணுக்கு வந்த உடனே சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில் இப்புதிய முறை கடந்த சில நாட்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பண்ருட்டியை சேர்ந்த 77 வயதான முதியவர் கிருஷ்ணமூர்த்தி ‘ஹலோ சீனியர்’ காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு மாணிக்கம் என்பவர் ரூ.50ஆயிரம் கடனாக வாங்கி கொண்டு அதில் ரூ.10 ஆயிரம் மட்டுமே திருப்பி கொடுத்ததாகவும், மீதி பணத்தை தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகார் தெரிவித்திருந்தார். அதன் பேரில் பண்ருட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் புஷ்ப ராஜ் இருவரையும் விசாரித்ததில் பணத்தை வாங்கிய மாணிக்கம் வரும் 27-ம் தேதிக்குள் பணத்தை கொடுத்து விடுவதாகவும், கொடுக்க தவறினால்காவல்துறையின் சட்டப்படியான நடவடிக்கைக்கு கட்டுப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதனை கிருஷ்ணமூர்த்தியும் ஏற்றுக் கொண்டதால் இருவரிடமும் காவல் நிலையத்தில் எழுதி வாங்கி, பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

இது போல எனதிரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய தயாளன் என்பவர் ‘ஹலோ சீனியர்’ காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு, தனது மூத்த மகன் சுரேஷ் தன்னையும், தனது மனைவியையும் வீட்டை விட்டு வெளியே துரத்துவ தாகவும், அடிக்கடி பிரச்சினை செய்வதாகவும் புகார் தெரிவித் திருந்தார்.

அதன் பேரில் புதுப்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் கனகராஜ் விசாரணை நடத்தினார். இதில், தயாளனுக்கு இரண்டு மகன்கள் இருப்பதால் தயாளனும் அவரது மனைவியும் இளைய மகனுடன் வீட்டின் மேல் பகுதியில் தங்கிக்கொள்வதாகவும், மூத்த மகன் சுரேஷ் கீழே தங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அப்பா, அம்மாவிடம் இனிமேல் எந்த ஒரு பிரச்சினையும் செய்யக்கூடாது என்று சுரேஷூக்கு அறிவுறுத்தப்பட்டு சமாதானம் செய்து வைக்கப்பட்டு, பிரச் சனைக்கு தீர்வு காணப்பட்டது.

இது போல ஜனவரி மாதம் ‘ஹலோ சீனியர்’ காவல் உதவி எண்ணில் குடும்ப பிரச்சினை, கணவன் மனைவி பிரச்சினை, நில பிரச்சினை, பண பிரச்சினை மற்றும் நோயுடையோரை கவனிக்கமறுத்தல் போன்ற முதியவர்கள் சார்ந்த 20 புகார்களுக்கு, தொலைபேசியில் தகவல் பெறப்பட்டு, நேரில் விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x