Published : 05 Apr 2016 08:08 PM
Last Updated : 05 Apr 2016 08:08 PM

தேமுதிகவை உடைக்க திமுக சதி: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தேமுதிகவை உடைக்க திமுக சதி செய்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்‌ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:

''தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு செய்துகொண்ட பிறகு திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.

எனவே, தன்னோடு உடன்பாடு வைத்துக்கொள்ள விரும்பாத தேமுதிகவை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு திமுக தலைமைதான் சதித் திட்டம் தீட்டியுள்ளது. அதனால்தான் சந்திரகுமார் உள்ளிட்ட சிலரை தேமுதிகவில் இருந்து விலகச் செய்திருக்கிறது.

திமுகவின் சதியால் தேமுதிகவுக்கும், மக்க‌ள்நலக் கூட்டணிக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.''

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

முன்னதாக, மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக விலக வேண்டும் என அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் தமது ஆதரவாளர்களுடன் பகிரங்கமாக வலியுறுத்தினார். திமுக கூட்டணியில் இணைவதால் மட்டுமே தேமுதிகவை காப்பாற்ற முடியும் என்றும், மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்தது தற்கொலை முடிவு என்றும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, தேமுதிகவில் போர்க்கொடி தூக்கிய சந்திரகுமார் உள்பட 10 நிர்வாகிகளும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்தார் நீக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகளையும் நியமனம் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x