Published : 23 Apr 2016 07:49 AM
Last Updated : 23 Apr 2016 07:49 AM
தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வழக்கத்தைவிட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. வெப்பத்தின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இன்னும் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறும்போது, ‘‘இன்று (22-ம் தேதி) சென்னை விமான நிலையத்தில் 41.8 டிகிரி செல்சியஸ், சென்னை நுங்கம்பாக்கத்தில் 40.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. மேற்கு திசையில் இருந்து ஈரப்பதம் குறைந்த வறண்ட தரைக்காற்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் வீசும் சூழல் இருப்பதால், அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்’’ என்றார்.
உள் மாவட்டங்களில் மழை
இதற்கிடையில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவகிரி, ஆய்க்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசியில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 3 நாட்களுக்கு உள் தமிழகத்தில் மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள ஒருசில இடங்களில் மழையோ, இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT