Published : 30 Apr 2016 09:17 AM
Last Updated : 30 Apr 2016 09:17 AM
வேட்புமனு தாக்கல் இறுதி நாளான நேற்று புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி உட்பட என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அப்போது ‘மீண்டும் ஆட்சியமைப்போம்' என்று ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் தனியாக போட்டியிடுகிறது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் இறுதியாக கடந்த புதன்கிழமை 21 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் ரங்கசாமி. மீதமுள்ள 9 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில், தனித்தனியாக அந்தந்த வேட்பாளர்களிடம் மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டு ரகசியம் காக்கப்பட்டது.
மனு தாக்கலுக்கான இறுதி நாளான நேற்று என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்திரா நகர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ரங்கசாமி முதலில் அப்பா பைத்தியசாமி கோயிலில் வழிபாடு செய்து விட்டு மனு தாக்கல் செய்ய வந்தார். தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கூட்டுறவு சங்க பதிவாளருமான ஏ.எஸ்.சிவக்குமாரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, "வரும் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
ஆளும் கட்சி பொதுச் செயலாளர் வி.பாலன் (முதலியார்பேட்டை) தொழிலாளர் நல துணை ஆணையர் ஆர்.ஜெயக்குமாரிடமும், சட்டப் பேரவைத் தலைவர் சபாபதி (அரியாங்குப்பம்) தொழில் வணிகத்துறை இயக்குநர் மலர்க் கண்ணனிடம் மனுதாக்கல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT