Published : 31 Jan 2022 08:42 PM
Last Updated : 31 Jan 2022 08:42 PM

இவர்களுக்குதான் மரியாதை இல்லாமல் பேசத் தெரியுமா? - திமுக கூட்டணி ஆலோசனையில் கொதித்த ஜோதிமணி

கரூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தளுக்கான வார்டு ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையின்போது, தன்னை திமுகவினர் வெளியேற்றிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி சத்தம் போட்டது, திமுக - காங்கிரஸ் கூட்டணி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள் வார்டுகளை ஒதுக்கீடு செய்துவருகின்றன. கரூர் மாவட்டத்தில் வார்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தையானது மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி ஜோதிமணி, காங்கிரஸின் கரூர் மாவட்டச் செயலாளர் சின்னசாமி உள்ளிட்டோர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர்கள் காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் சின்னசாமியிடம் மட்டுமே பேசியதாகவும், ஜோதிமணியிடம் பேசவில்லை என்றும் சொல்லப்படுகிறது. மேலும், ஜோதிமணியிடம் கலந்தாலோசிக்காமல் வார்டுகளை ஒதுக்கீடு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை ஜோதிமணி கேள்வியாக எழுப்பியப்போது, திமுக நிர்வாகி ஒருவர், "நீங்கள் பேசுவதென்றால் வெளியே சென்று பேசுங்கள்" எனக் கூறியுள்ளார்.

இதில் அதிருப்தி அடைந்த ஜோதிமணி, கூட்டத்தில் இருந்து வெளியேறியதோடு, "ஆலோசனையில் கலந்துகொள்ள வந்த என்னை எப்படி வெளியேறச் சொல்லலாம்? இவர்களுக்குதான் மரியாதை இல்லாமல் பேசத் தெரியுமா? நான் பேச எவ்வளவு நேரமாகும். நான் இவர்கள் வீட்டு விஷேசத்திற்கு வந்திருக்கிறேனா... வெளியே போக சொல்வதற்கு. இவர் என்ன வேண்டுமென்றாலும் பேசுவாரா?" என்று ஆவேசமாக சத்தமிட்டுக் கொண்டே வெளியே வந்தார். இந்தச் சம்பவத்தால் கரூர் கலைஞர் அறிவாலயம் சிறிதுநேரம் பரபரப்பானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x