முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பில் மறு ஆய்வா? - நீர்வள ஆணையத்திற்கு தினகரன் கண்டனம்

டிடிவி தினகரன் | கோப்புப் படம்.
டிடிவி தினகரன் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் அறிக்கை அளித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது அடுத்தடுத்த ட்விட்டர் பதிவுகளில், "முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் அறிக்கை அளித்திருப்பது கண்டனத்திற்குரியது.

ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர்க் குழுவினர் ‘முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது’ என்று உறுதிபட தெரிவித்துவிட்ட பிறகும் திடீரென தேவையற்ற பிரச்னையைக் கிளப்புவது நல்லதல்ல. இதனால், தமிழக - கேரள மக்களிடையே தேவையற்ற கசப்புணர்வே ஏற்படும்.

எனவே, மத்திய நீர்வள ஆணையம் நடுநிலையோடு நடந்து கொண்டு, தமது அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். இந்தக் கோரிக்கையை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வலுவான எதிர்வினை ஆற்ற வேண்டும்'' என்று டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in