Last Updated : 31 Jan, 2022 11:03 AM

 

Published : 31 Jan 2022 11:03 AM
Last Updated : 31 Jan 2022 11:03 AM

பின்னலாடைத் துறையில் 50% சிறு, குறு நிறுவனங்கள் மூடல்: திருப்பூர் தொழில் துறையினர் கவலை

திருப்பூர்

நெருக்கடி நிலையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் உதவாததால்,திருப்பூரில் 50 சதவீதம் சிறு, குறுபின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

பின்னலாடை உற்பத்தியில் இந்தியாவின் மிகப்பெரும் மையமாகவும் சர்வதேச முக்கியத்துவம் பெற்ற நகரமாகவும் திருப்பூர் விளங்குகிறது. ஆண்டுக்கு ரூ.50,000 கோடி வரை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது ஏற்றஇறக்கங்களை சந்தித்து வருகிறது. கரோனா ஊரடங்கு, நூல் விலை தொடர்ந்து உயர்வு போன்ற தொடர் பிரச்சினைகளால் திருப்பூரில் 50 சதவீதம் சிறு, குறு பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக, திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் (டீமா) எம்.பி.முத்துரத்தினம் கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

திருப்பூர் பின்னலாடைத் துறையைப் பொறுத்தவரை சிறு, குறு மற்றும் நடுத்தரம், பெரிய நிறுவனங்கள் என 15,000-க்கும் மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. நிட்டிங், டையிங், காம்பேக்டிங், பிரிண்டிங், அயர்னிங், பேக்கிங், பவர்டேபிள் உள்ளிட்ட ‘ஜாப் ஒர்க்’ நிறுவனங்களும் இதில் அடங்கும்.

பின்னலாடைத் துறைக்கு முக்கிய மூலப்பொருளான நூலின் விலை, கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 15 மாதங்களுக்கு முன் கிலோ ரூ.200-க்கு விற்ற நூல், தற்போது ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே கரோனா தொற்று பரவலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து முழுமையாக மீளாத நிலையில், நூல் விலை உயர்வு மீண்டும் எங்களை அதலபாதாளத்தில் தள்ளிவிட்டது.

சர்வதேச நாடுகளுடன் போட்டிபோட்டு ஆர்டர்களை எடுத்தாலும் உற்பத்தி செய்யப்பட்ட பின்னலாடைகளை ஏற்றுமதி செய்ய கன்டெய்னர்கள் கிடைப்பதில்லை. சரக்குகளை தரைவழி மார்க்கமாக அனுப்புவதற்கு முக்கியத்துவம் அளித்து, சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கன்டெய்னர்களை தன்னகத்தே வைத்துக்கொள்ள அதிக பொருளாதாரத்தை செலவு செய்து வருகிறது. இதனால் கன்டெய்னர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு நடைபெறும் வர்த்தகப் போருக்கு மத்தியில் மூலப்பொருள், போக்குவரத்து என அனைத்துக்குமான செலவுகளை உள்ளடக்கி, விலை நிர்ணயம் செய்து ஆர்டர்களைப் பெறமுடியவில்லை. நெருக்கடி நிலையில் மத்திய, மாநில அரசுகளும் கைவிட்டதால், திருப்பூரில் 50 சதவீதம் சிறு, குறு நிறுவனங்கள் வேலை இல்லாமல் மூடப்பட்டுவிட்டன.

உடனடியாக ஆயத்த ஆடைத்துறை சந்திக்கும் பிரச்சினைகளில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சு இறக்குமதிக்கான வரியை நீக்க வேண்டும். இத்துறைக்கென தனி வாரியம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x