நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவு
Updated on
1 min read

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு எரிசக்தித் துறைச் செயலாளர், டான்ஜெட்கோ இயக்குநர், தமிழ்நாடு மின்வாரியத் தலைவர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் மற்றும் அமைப்புசாரா எரிசக்திப் பிரிவு தலைமைப் பொறியாளர் ஆகியோர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2012-ல் அறிவிக்கப்பட்ட சூரிய மின்சக்தி கொள்கையின்படி 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட சூரிய மின்உற்பத்திஆலையை உருவாக்க திட்டமிடப்பட்டது. விருதுநகர் மாவட்டம் வீரசோழன் என்னுமிடத்தில் 100 மெகாவாட் சூரிய மின் ஆலையை அமைக்க அல்அமீன் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தரப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின்படி முதற் கட்டமாக 40 மெகாவாட் சூரியமின் உற்பத்தி ஆலை அமைக்க ரூ.5 கோடி வைப்பீடு உட்பட ரூ.175 கோடி செலவில் உற்பத்தியை தொடங்க பணிகள் நடந்தது. ஆனால் குறித்த காலத்துக்குள் உற்பத்தியை தொடங்கவில்லை எனக்கூறி டான்ஜெட்கோ அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இதை எதிர்த்து அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த தனியார் நிறுவனம் செயல்பட அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, அனுமதி கோரியபோது புதிய திட்டமாக கருதி மேலும் ரூ.2.50 கோடி வைப்பீடு தொகை செலுத்த டான்ஜெட்கோ உத்தரவிட்டது. அதை எதிர்த்து தனியார் நிறுவனம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அதன்படி ரூ.2.50 கோடி வைப்பீடு தொகை செலுத்தாமல் மனுதாரரின் நிறுவனம் செயல்பட அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதையேற்ற உயர் நீதிமன்றம் அந்த அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.

அதன்படி சூரிய மின் உற்பத்திஆலை தொடங்க அனுமதி கோரியபோது உயர் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்துக்கு முரணாக மீண்டும் ரூ.2.50 கோடி செலுத்த டான்ஜெட்கோ உத்தரவிட்டது. அதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அல் அமீன் கிரீன் எனர்ஜி நிறுவனம் சார்பில் மீண்டும் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பாகநடந்தது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவு அவமதிக்கப்பட்டுஉள்ளதாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது. எனவேதமிழ்நாடு எரிசக்தித் துறைச் செயலாளர், டான்ஜெட்கோ இயக்குநர், தமிழ்நாடு மின் வாரியத் தலைவர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறைத் தலைவர் மற்றும் அமைப்பு சாராஎரிசக்தி பிரிவு தலைமைப் பொறியாளர் ஆகியோர் 4 வாரங்களில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in