Published : 30 Jan 2022 08:18 AM
Last Updated : 30 Jan 2022 08:18 AM

நாகர்கோவில் மாநகராட்சி முதல் மேயர் யார்? - திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக தீவிரம்

நாகர்கோவில்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி முதல் மேயர் பதவியை பெற திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக சார்பில் காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில்நாகர்கோவில் மாநகராட்சி, 4நகராட்சிகள், 51 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சிக்கு முதல் மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்பதால், பாஜக-அதிமுக கூட்டணி, திமுக-காங்கிரஸ் கூட்டணியினர் மேயர் பொறுப்பை பெறுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர். இதைப்போல் குளச்சல்,பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு நகராட்சி தலைவர் பொறுப்பை கைப்பற்றுவதிலும் கடும் போட்டி நிலவுகிறது. 51 பேரூராட்சிகளில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என ஆளும் கட்சியான திமுக தீவிரமாக உள்ளது. பேரூராட்சிகளில் பலத்தை காட்ட பாஜகவும் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. திமுகவிடமிருந்து கூடுதல் இடங்களை கேட்டுபெற வேண்டும் என்பதில் காங்கிரசும் உறுதியாக உள்ளது.

வேட்புமனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் இதுவரைசுயேச்சைகள் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை முதல் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் 233 வாக்குச்சாவடிகள் உள்ளன. 2,44,531 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப்பதிவுக்கு பின் வாக்கு பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்படவுள்ளன.

வாக்கு எண்ணிக்கைக்கும் எஸ்.எல்.பி. பள்ளியில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. நாகர்கோவில் மாநகரில் உள்ள 233 வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x