Published : 30 Jan 2022 09:16 AM
Last Updated : 30 Jan 2022 09:16 AM

அரசின் சலுகையில் தனியார் பள்ளியில் படித்ததால் மாணவியின் மருத்துவப் படிப்பு கனவு தகர்ந்தது: தமிழக அரசு உதவ கோரிக்கை

அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றதால், அரசின் சலுகையில் தனியார் பள்ளியில் சேர்ந்த மாணவி, 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு பிரிவின் கீழ் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போனதால் விரக்தியடைந்துள்ளார். எனவே, தனது மருத்துவக் கனவை நிறைவேற்ற தமிழக அரசு உதவ வேண்டும் என அந்த மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருநெல்லிவயலைச் சேர்ந்தவர் முனுசாமி. தூய்மைப் பணியாளர். இவரது மகள் ராகவி. இவர், கடந்த 2017-ல் கோபாலபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 481 மதிப்பெண் பெற்றார். இதையடுத்து, ஆதிதிராவிடர் நலத்துறையின் சிறப்புத் திட்டத்தின் கீழ், மாணவிக்கு தனியார் பள்ளியில் இலவசமாக கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, மாணவி ராகவி கைக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்தார்.

அங்கு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ராகவி, கடந்த ஆண்டு நீட் தேர்வில் 159 மதிப்பெண்ணும், நிகழாண்டு 297 மதிப்பெண்ணும் பெற்றார். ஆனால், தனியார் பள்ளியில் பயின்றதால் இவருக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை. அதேசமயம், அரசின் திட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் பயிலாமல், அரசுப் பள்ளியிலேயே படித்திருந்தால், தனக்கும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்திருக்கும் என வருத் தத்துடன் ராகவி தெரிவிக்கிறார்.

இது குறித்து அவர் கூறிய தாவது: மருத்துவராக வேண்டும் என்பதற்காகவே மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன். 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றதால், அரசின் சலுகையின் கீழ் என்னை தனியார் பள்ளியில் படிக்க அறிவுறுத்தினர். நிகழாண்டு நீட் தேர்வில் 297 மதிப்பெண் எடுத்தும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை. எனவே, அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்பை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x