Published : 29 Jan 2022 07:51 AM
Last Updated : 29 Jan 2022 07:51 AM

சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் அதிக கரோனா தொற்று: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகம்கண்டறியப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பின் தற்போதைய நிலை, மருத்துவக் கட்டமைப்பு, தடுப்பூசி நிலவரம் போன்றவை குறித்து அனைத்து மாநிலங்கள் உடனான ஆலோசனை கூட்டம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் காணொலி மூலம் நேற்று நடந்தது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் 27-ம் தேதி நிலவரப்படி, 2.14 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அதில் 94.8 சதவீதம் பேர் வீட்டு தனிமையிலும், 5.2 சதவீதம் பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். தமிழகத்தில் 1.33 லட்சம் சாதாரண படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 8 சதவீதம் பேர் மட்டுமே உள்நோயாளிகளாக உள்ளனர். 42,660 ஆக்சிஜன் படுக்கைகளில் 10 சதவீதம் பேரும்,10,147 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளில் 11 சதவீதம் பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.

தினசரி பாதிப்பு 28 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. கோவை,செங்கல்பட்டு, திருப்பூர், கன்னியாகுமரி, சென்னை ஆகிய 5 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகம் கண்டறியப்படுகிறது.

தமிழகத்தில் 89.83 சதவீதம் பேர் முதல் தவணையும், 67.30 சதவீதம் பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி போட்டுள்ளனர். 15-18 வயதினர் 33.46 லட்சம் பேரில் 25.88 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 3.31 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, 29-ம் தேதி (இன்று) 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிதாக 26,533 பேருக்கு கரோனா

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 15,579, பெண்கள் 10,954 என மொத்தம் 26,533 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 5,246,கோவையில் 3,448, திருப்பூரில்1,779, செங்கல்பட்டில் 1,662, சேலத்தில் 1,387, ஈரோட்டில் 1,261 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம்தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை32 லட்சத்து 79,284 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 30 லட்சத்து 29,961 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 28,156 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 11,863 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் 48 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 21 பேர்,செங்கல்பட்டில் 10 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x