Published : 28 Jan 2022 06:11 PM
Last Updated : 28 Jan 2022 06:11 PM

'அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு செய்க' - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்களுக்கு வெ.பழனிகுமார் அறிவுரை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வாக்காளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிப்பதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தேர்தல் பார்வையாளர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேர்தல் அட்டவணையின்படி, நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்கள் நடைபெறுவதை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமையிலும், மாநில தேர்தல் ஆணையச் செயலாளர் எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., முன்னிலையிலும், இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், மாவட்ட தேர்தல் பார்வையாளர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (28.01.2022) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணையர் தலைமையேற்று, தேர்தல் நடைபெறும்பொழுது தேர்தல் பார்வையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து பேசியதாவது, உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, வேட்பு மனு பெறுதல், வேட்பு மனு பரிசீலனை, சின்னங்கள் ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் சிசிடிவி மூலம் கண்காணித்திடவும், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறையிலும் சிசிடிவி பொருத்தி கணகாணிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், வாக்குச்சாவடிகள் வைப்பு அறை, வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதையும் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

வட்டார பார்வையாளர்கள் (Block Observers)மற்றும் நுண்பார்வையாளர்கள் (Micro Observers) ஆகியோரின் தேர்தல் தொடர்பான பணிகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் எளிதில் வந்து வாக்களிக்கும் வகையில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. மேலும் வேட்பு மனுத் தாக்கலின்போது வேட்பு மனுத் தாக்கல் செய்பவர்கள், மற்றும் உடன் வருபவர்கள் முறையாக முகக்கவசம் அணிந்தும், வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்டும், சமூக இடைவெளி கடைபிடிப்பதை கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மாவட்டத் தேர்தல் அலுவலர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் கூட்டத்தின்போது, நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடைபெறுவதை கண்காணித்திட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

வாக்குச்சாவடி மையங்களில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் சுதந்திரமாக வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதை கண்காணித்திட தேர்தல் பார்வையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது எவ்விதமான விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் நடுநிலையோடு வேட்பு மனு பரிசீலனை நடைபெறுவதை கண்காணித்திட கேட்டுக் கொள்ளப்பட்டது. மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாகவும், முறையாகவும் கடைபிடிக்கப்படுவதையும், வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் முழுமையாக சென்றடைவதையும் கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்து, வாக்காளர்கள் எந்தவிதமான அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிப்பதற்கு ஏதுவாக தகுந்த ஏற்பாடுகள் மற்றும் வாக்குப்பதிவு முடிவுற்றபின் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு தக்க பாதுகாப்போடு கொண்டு செல்வதற்கு எடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளை கண்காணித்திட கேட்டுக் கொள்ளப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை வெளிப்படைத் தன்மையுடனும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x