Last Updated : 28 Jan, 2022 02:04 PM

 

Published : 28 Jan 2022 02:04 PM
Last Updated : 28 Jan 2022 02:04 PM

புதுச்சேரியில் 1,271 பேருக்கு கரோனா தொற்று; 5 பேர் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப் படம்.

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 1,271 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இன்று (ஜன. 28) வெளியிட்டுள்ள தகவலில், ''புதுச்சேரி மாநிலத்தில் 4,714 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 835, காரைக்கால்- 303, ஏனாம்- 121, மாஹே- 12 என மொத்தம் 1,271 (26.96 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 58 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனைகளில் 236 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 14,057 பேரும் என மொத்தமாக 14,293 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும், புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த 52 வயது ஆண், அரியாங்குப்பம் சண்முகா நகரைச் சேர்ந்த 38 வயது ஆண், பாகூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர், கம்பன் நகரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி, காரைக்கால் நிரவியைச் சேர்ந்த 36 வயது ஆண் என ஒரே நாளில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,921 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது.

புதிதாக 2,724 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 755 (89.80 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என முதல் தவணை 9 லட்சத்து 19 ஆயிரத்து 884 பேருக்கும், இரண்டாம் தவணை 6 லட்சத்து 3 ஆயிரத்து 316 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 6 ஆயிரத்து 728 பேருக்கும் என மொத்தமாக 15 லட்சத்து 29 ஆயிரத்து 928 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x