Published : 28 Jan 2022 01:41 PM
Last Updated : 28 Jan 2022 01:41 PM

பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு வழக்கு: 5,000+ குடும்பங்களுக்காக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை

சென்னை: கரோனா பேரிடர் மற்றும் மாணவர்களின் நலன் கருதி , ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் உள்ள குடியிருப்புகளுக்கான மின் இணைப்பை துண்டிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

.சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள பெத்தேல் நகரில் உள்ள வணிக மற்றும் குடியிருப்பு சார்ந்த ஆக்கிரமிப்பை அகற்றும்படி கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி ஐ.ஹெச்.சேகர் என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2015-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்று மீண்டும் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். மேலும், வீடு மற்றும் வணிக நோக்கங்களுக்காக ஆக்கிரமித்தவர்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கடந்த வார உத்தரவுக்கு பிறகு, 1052 வணிக கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 1007 நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது, 65 சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. கரோனா காலக்கட்டம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் மற்றும் அவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு, வீடுகளுக்கான மின் இணைப்பை துண்டிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டு, பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இடத்திற்கு மட்டும் கரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டுவதா என கேள்வி எழுப்பினர்.

அப்போது, பெத்தேல் நகர் பொதுமக்கள் தரப்பில் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பெத்தேல் நகரில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால் ஆக்கிரமிப்பு அகற்றும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த மனுக்களையும், அரசு தரப்பு கூடுதல் மனுவையும் வரும் திங்கட்கிழமை (ஜனவரி 31) விசாரிப்பதாக கூறி வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x