நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு: அபராத நடவடிக்கையை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு: அபராத நடவடிக்கையை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: நடிகர் விஜய் இறக்குமதி செய்த பிஎம்டபிள்யூ சொகுசு காருக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், 'கடந்த 2005-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிம்டபிள்யூ எக்‌ஸ் 5 என்ற சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதற்கு தாமதம் செய்ததற்காக 400 சதவீத அளவிற்கு வணிக வரித்துறை அபராதம் விதித்துள்ளது. ஏற்கெனவே நுழைவு வரி தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால்தான் இந்த தாமதம் ஏற்பட்டது. நுழைவு வரி செலுத்திய நிலையில், அதிகப்படியான அபராதம் விதித்ததை எதிர்த்தே வழக்கு தொடர்ந்துள்ளேன். எனவே, அபராதம் விதிப்பது தொடர்பான நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார். மேலும், இதேபோல் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அடையார் கேட் ஹோட்டல் நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கோடு இந்த வழக்கையும் சேர்ப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

அத்துடன், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை அபராதத்தை வசூலிக்க எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதை வணிக வரித்துறை உறுதி செய்யுமாறு அரசு தரப்பு வழக்கறிஞர் ரிச்சர்ட் வில்சனுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in